கோவிலில் புகுந்த மழைநீரால் சுற்றுலா பயணிகள் அவதி.
தஞ்சாவூரில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் மழை நீர் சூழ்ந்து உள்ளதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ளது தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில். இந்த கோவிலுக்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள சிற்பக்கலைகள் உலக அளவில் பிரசித்திப் பெற்றவை. தற்போது பெய்து வரும் கனமழையால் இந்த கோவிலின் உள் பிராகாரத்தில் சுமார் 3 அடி அளவில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பிரகாரத்தில் உயர் மின் அழுத்த கம்பிகள் தண்ணீரில் மூழ்கி உள்ளதும் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.