பெண் IPS பாலியல் புகாரில் டிஜிபி ராஜேஸ்தாஸை உடனே பணியிடை நீக்கம் செய்க - ஸ்டாலின் கோரிக்கை

பெண் IPS பாலியல் புகாரில் டிஜிபி ராஜேஸ்தாஸை உடனே பணியிடை நீக்கம் செய்க - ஸ்டாலின் கோரிக்கை
பெண் IPS பாலியல் புகாரில் டிஜிபி ராஜேஸ்தாஸை உடனே பணியிடை நீக்கம் செய்க - ஸ்டாலின் கோரிக்கை

முதலமைச்சர் சுற்றுப் பயணத்திற்கு பாதுகாப்புக்குச் செல்லும் போதே பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு, பாலியல் தொல்லை கொடுக்கும் தைரியத்தை சிறப்பு டி.ஜி.பி.யே பெற்றிருப்பது அசிங்கத்தின் உச்சபட்சம் என்றும் இது ஆணவத்தின் வெளிப்பாடு என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்றைய தினசரி தமிழ் பத்திரிகைகளில் பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது புகார்” என்று செய்தி வெளிவந்திருக்கிறது. தங்களுக்கு நேரும் அநீதியை சந்திக்கும் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லவே பெண்கள் பயந்து தயங்கும் நேரத்தில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனது மூத்த போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. 

முதல்வர் புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் நிகழ்ந்த இந்த பாலியல் தொல்லை தமிழகக் காவல்துறைக்கு மிகப் பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கண்ணியமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியாற்றும் தமிழகக் காவல்துறையில் இதுபோன்ற விரல் விட்டு எண்ணும் சில புல்லுருவி போலீஸ் அதிகாரிகளால் “யூனிபார்மில் உள்ள பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை” என்று உருவாகியுள்ள நிலையைப் பார்த்து அத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பழனிசாமி வெட்கித் தலைகுனிய வேண்டும்.

ஆனால், பொள்ளாச்சி பாலியல் குற்றத்திலேயே அ.தி.மு.க.வினரைக் காப்பாற்றிய முதலமைச்சர், “பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சி” என நடத்தி வரும் பிரச்சாரத்தைப் பொய்யாக்கி விட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் இது முதல் புகார் அல்ல. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்த ஐ.ஜி. முருகன் மீது, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்தார். அதையும் மூடி மறைத்தார் முதலமைச்சர். உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு சி.பி.சி.ஐ.டி.யில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதிலும் பாதுகாத்து - இன்றுவரை அந்த வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தனது ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும், தனது சட்ட விரோத உத்தரவுகளை நிறைவேற்றவும் இதுபோன்ற பாலியல் தொந்தரவில் ஈடுபடும் போலீஸ் அதிகாரிகளை முதலமைச்சர் திரு. பழனிசாமி காப்பாற்றுகிறார். முதலமைச்சரின் பிரச்சார பாதுகாப்பிற்குச் செல்லும் ஒரு உயர் போலீஸ் அதிகாரியே இப்படியொரு அத்துமீறலில் ஈடுபட்டுள்ள - அசிங்கத்தின் உச்சபட்சம்.தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு முதலமைச்சர் உருவாக்கியுள்ள இந்த இழி நிலையைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது.

எனவே, பெண் போலீஸ் எஸ்.பி. கொடுத்துள்ள புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. திரு.ராஜேஸ்தாஸை பணியிடை நீக்கம் செய்து குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இதுபோன்ற போலீஸ் அதிகாரியைப் பாதுகாத்து தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பெண் போலீசார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்க முயற்சித்தால் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தில் இறங்கும்என்று எச்சரிக்கிறேன்” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com