காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு மூலம் 8.7 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதை இந்திய தொழில்நுட்பக் கழக வல்லுநர் குழு உறுதி செய்தது. இதனையடுத்து தலைமை ஸ்தபதி முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையில் திருப்பணிப்பிரிவு கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த கவிதாவை சென்னை அண்ணாநகரில் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட கவிதா சிறையில் அடைக்கப்பட்டார். பழனி, திருத்தணி, ஸ்ரீரங்கம் கோயில்களில் இணை ஆணையராக பணியாற்றியவர் கவிதா என்பது குறிப்பிடத்தக்கது.