8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. இன்றைய வானிலை அப்டேட் என்ன?
தமிழகத்தில் இன்று முதல் 23 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக செவ்வாய்க் கிழமையான இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில், கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், வரும் 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, மேற்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் காவிரி படுகை மாவட்டங்களில் வரும் 21, 22 ஆகிய தேதிகளில், கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் நாகை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, கருங்கன்னி பகுதிகளில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் பொழிந்தது
இதில் மீனவர்களுக்கான எச்சரிக்கையாக தமிழக கடலோர பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், 45 கிலோ மீட்டர் வரை சூறாவளிக்காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதில் தமிழகத்தை பொறுத்தவரை, கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு பள்ளுகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

