தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு - கட்டுப்பாடுகள் என்னென்ன?
தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன.
கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. மதுக்கடைகளை திறப்பதால், கொரோனா தொற்று வேகமாக பரவும் என்றும், கொரோனாவை பரப்பும் ஹாட் ஸ்பாட் மையங்காக டாஸ்மாக் மாறிவிடும் என்றும் கூறி, இதற்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வு முன் காணொலி காட்சி மூலம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், மதுபானம் அத்தியாவசிய பொருள் அல்ல என்பதாலும், தொற்று பரவும் ஹாட்ஸ்பாட் மையங்களாக மதுக்கடைகள் மாறிவிடும் என்பதாலும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. மேலும் ஊரடங்கால் மதுப் பழக்கத்தில் இருந்து பலர் விடுபட்டிருக்கும் நிலையில், அவர்களை மீண்டும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் எனவும் வாதிடப்பட்டது. மருத்துவ ரீதியாக மதுக்கடைகள் திறப்பது உகந்ததல்ல என மருத்துவ நிபுணர்களும் எச்சரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், மதுக்கடைகளில் பெருமளவில் கூட்டம் கூடாமல் தனிநபர் இடைவெளிவிட்டு மதுபானங்களை வாங்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா? வீடுகளுக்கு நேரடியாக சென்று விநியோகிக்க முடியுமா? என்ற கேள்விகளை முன் வைத்தனர். ஆனால், அவை சாத்தியமற்றது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளையும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளையும் பின்பற்றி மதுபானக் கடைகளை திறக்க எந்த தடையும் இல்லை எனக் கூறி அதற்கு அனுமதி வழங்கினர். தொடர்ந்து மதுபானக் கடைகளை திறப்பதற்கான நிபந்தனைகளையும் நீதிபதிகள் வாசித்தனர். அதில் மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டுமே ஒருவருக்கு மதுபானம் விற்க வேண்டும், வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது தரப்பட வேண்டும் என நிபந்தனை விதித்தனர்.
ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஆன்லைனில் பணம் செலுத்துவோருக்கு 2 மதுபாட்டில்கள் வழங்கலாம் என்றும் தெரிவித்தனர். மதுபான விற்பனையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் விதிமீறல்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்படும் என்றும் எச்சரித்தனர். இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் மே 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்
இதைத்தொடர்ந்து சென்னையை சேர்ந்தவர்கள் அண்டை மாவட்டங்களுக்குச் சென்று மது வாங்கினால் கைது செய்யப்படுவர் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று முதல் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்படவுள்ளன.
மதுபானக்கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர் வசிப்பிட அடையாள அட்டையுடன் சென்று மதுபானங்களை வாங்கிச் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடை இருக்கும் பகுதிக்கு தொடர்பில்லாத சென்னை மாநகர் போன்ற பகுதிகளிலிருந்து அண்டை மாவட்டங்களுக்கு சென்று மது வாங்கினால் அவர்கள் செய்யப்படுவர் என்று வடக்கு மண்டல ஐ.ஜி.நாகராஜன் எச்சரித்துள்ளார்.
மேலும் மதுபானம் வாங்க வயது வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மது வாங்கிக்கொள்ளலாம். 40 - 50 வயதிற்குட்பட்டவர்கள் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிவரை வாங்கிக்கொள்ளலாம். 40 வயதிற்குட்பட்டவர்கள் 3 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.