இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து சசிகலா -டிடிவி தினகரன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், கட்சியில் பொதுச்செயலாளர் பதவியையே ஈபிஎஸ் -ஓபிஎஸ் அணி நீக்கிவிட்டதாகவும், அதற்கு அவர்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் வாதிட்டார்.
அரசியல் மாற்றத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்ததாகவும், தங்கள் தரப்புக்கு கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் வாதிட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, தேர்தல் ஆணையம் முறையாக, அனைத்து தரப்புக்கும் தங்கள் வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கி, அதன் பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது எனக் கூறினார்.
இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கடந்த 8-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்க முயற்சிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.