தாம் கடத்தப்பட்டதாகவும், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடக் கூடாது என கூறி தாம் துன்புறுத்தப்பட்டதாகவும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். நீதிபதி முன் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து செல்லப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்திரிகையாளர்கள் மற்றும் தமிழக மக்களாலேயே தாம் இதுவரை உயிரோடு உள்ளதாகவும் கூறினார். அத்துடன் பாலியல் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
முகிலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளார் என அவரது மனைவி பூங்கொடி குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் சிபிசிஐடி வசம் இருந்த முகிலனை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்
மருத்துவப் படிப்புகளில் முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டம் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநிலத்தின் முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், ஒரு மனதாக எடுக்கப்படும் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்க உள்ளார்.
தண்ணீர் எடுக்கும் இடங்களில் பொதுமக்களின் எதிர்ப்பை சந்திக்க நேரிடுவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் கூறி தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் தண்ணீர் எடுப்பதை நிறுத்திக்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தனர். இதனால் சென்னையில் கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்த நிலையில் தண்ணீர் எடுக்க பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவதாக அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவாதம் அளித்ததாக தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் நிஜலிங்கம் புதியதலைமுறையிடம் தெரிவித்தார்.
பழனி முருகன் கோயிலில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான நவபாஷாண மூலவர் சிலையை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது உண்மைதான் என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக, பழனி முருகன் கோயிலுக்காக 2004ஆம் ஆண்டு ஐம்பொன்னில் உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதில் முறைகேடு நடைபெற்றதை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், இணை ஆணையர்கள் கே.கே.ராஜா, புகழேந்தி, தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.