தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6 பெண்கள், பன்றிக்காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனையில் காய்ச்சல்கள் காரணமாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி மற்றும் சூலூரைச் சேர்ந்த புஷ்பா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அதேபோல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த அத்தனூர் பகுதியைச் சேர்ந்த அங்காயி என்ற மூதாட்டி பன்றிக் காய்ச்சல் காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த மல்லிகா என்பவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்பவரும், திருமங்கலத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் அங்கு 23 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கும், 98 பேர் வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் மதுரை அரசு மருத்துவமனையில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.