டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாள் - பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை
தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதல் நிலை தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், கேள்வி ஒன்றுக்கான விடைகளில் தந்தை பெரியார் பெயர் தவறாகவும் ஜாதியுடனும் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பணியிடங்களுக்காக நடைபெற்ற குரூப்-2 தேர்வு 2 ஆயிரத்து 268 மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் வினாத்தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு தரப்பட்ட 4 விடைகளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என ஜாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டு உள்ளது.
காந்திஜி, ராஜாஜி மற்றும் அண்ணா ஆகிய தலைவர்களின் பெயர்கள் சரியான முறையில் அச்சிடபட்டுள்ள நிலையில், தந்தை பெரியார் பெயர் மட்டும் ஜாதியுடன் அச்சிடப்பட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது. இதன்மூலம் தந்தை பெரியார் பெயர் அவமதிக்கப்பட்டு உள்ளதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளனர். “குரூப்-2 வினாத்தாளில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பது பற்றி தெரியாது. நிபுணர்கள் குழுதான் வினாத்தாளை தயார் செய்து சீலிட்டு அனுப்புகிறது. குரூப்-2 தேர்வு வினாத்தாள் பிரச்னை குறித்து தேர்வர்கள் நவம்பர் 13 முதல் முறையிடலாம். வினாத்தாள் பிரச்னை பற்றி நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.