மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ள தமிழகம்..!
நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான வசந்தகுமார், தற்போது எம்.பி.யாக தேர்வாகி உள்ளதால் விரைவில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்.
தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வசந்தகுமார். மக்களவை தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார் வசந்தகுமார். நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வசந்தகுமார் தோற்கடித்தார். எனவே தற்போது எம்.பியாக தேர்வாகி உள்ளதால் விரைவில் தனது நாங்குநேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வார். அதனைத்தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.
இதுமட்டுமில்லாமல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.