அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி.. அதிகாரிகள் சொல்லும் முக்கிய காரணம்!
சென்னையை உள்ளடக்கிய பல இடங்களில் திடீர் மின்வெட்டு தொடர, மின் தேவை அதிகரிப்பே முக்கிய காரணம் என அதிகாரிகள் விளக்குகின்றனர். கடந்தாண்டு 16-17 ஆயிரம் மெகாவாட் இருந்த தேவை இவ்வாண்டு 20,500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் மின் தேவை 3,500-3,800 மெகாவாட்டிலிருந்து 5,000 மெகாவாட்டாக உயர்ந்த நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்படும் சூழலில், கடந்தாண்டை ஒப்பிடும்போது நடப்பாண்டு மின் தேவை அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். செப்டம்பர் மாதத்திலும் வெப்பத்தின் தாக்கம் தணியாததால், மின் தேவை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாத காலகட்டத்தில் 16 ஆயிரம் மெகா வாட் முதல் 17 ஆயிரம் மெகா வாட் வரை மின்சாரம் தேவைப்பட்ட நிலையில், தற்போது மின் தேவை 20 ஆயிரத்து 500 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது.
மூவாயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரம் மெகவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை ஜூன் மாதத்தில் மின் தேவை மூவாயிரத்து 500 முதல் மூவாயிரத்து 800 மெகாவாட்டாக இருக்கும் எனவும், ஆனால் நடப்பாண்டு ஐந்தாயிரம் மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
தடையில்லா மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

