
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்குச் சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஒரே நாடு ஒரே தேர்தலை கலைஞர் ஆதரித்தது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்..
கலைஞர் எப்போது ஆதரித்தார். எடப்பாடி பழனிசாமி முதலில் எதிர்த்தார். அதற்கு என்ன சொல்வது. பேட்டி கூட கொடுக்காமல் வெறும் கடிதம் மூலமாக எதிர்ப்பை தெரிவித்தார். அதை கொண்டு வந்து என்ன சாதிக்கப் போகிறார்கள். சமீபத்தில் தான் கர்நாடகாவில் தேர்தல் முடிந்தது. ஆட்சிகள் கவிழாதா. இது போன்ற நிறைய கேள்விகள் உள்ளது. ஏழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னையை கிளப்பி விடுகிறார்கள்.
இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று மோடி சொன்னார். அது போல மாற்றிவிட்டார் வாழ்த்துகள். கொள்கைக்காக உருவாக்கப்பட்டது தான் திமுக. ஆட்சி அதற்கு அடுத்தது தான். அதைவிட முக்கியம் சமூக நீதி எனவே அது தொடர்பாக தொடர்ந்து பேசுவேன். அண்ணா, பெரியார் யாரும் பேசாததை நான் பேசவில்லை. அதைவிட முக்கியம் 2024 தேர்தலில் பாசிச பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் ஏழரை லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் மிகப்பெரிய போராட்டம் நடந்தது. சர்ச்-கள் இடிக்கப்பட்டுள்ளது. முதலில் அதைப் பற்றி பேசுவோம் அதன் பிறகு சனாதனத்தைப் பற்றி பேசுவோம். சனாதனத்தைப் பற்றி தற்போது நான் பேசவில்லை. ஒழிப்பு மாநாட்டில் தான் நான் பேசினேன் என்றார்.