“டாஸ்மாக்கிற்கு பதிலாக வருவாய்க்கு வேறு திட்டம் உள்ளதா?” - நீதிமன்றம் கேள்வி
டாஸ்மாக்கை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய தமிழக அரசிடம் திட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் கோயில், பள்ளிக்கூடத்துக்கு அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த 2016ஆம் ஆண்டு 500 கடைகளும், 2017ஆம் ஆண்டு 500 கடைகளும் மூடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி 5 ஆயிரத்து 239 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் உள்ளன என்றும், அவற்றை படிப்படியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றனர்.
டாஸ்மாக்கை மூடினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய, வரிகளை உயர்த்துதல் போன்ற வேறு திட்டங்கள் தமிழக அரசிடம் உள்ளதா ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு எடுக்கும் முடிவுகள் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.