"தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை” - நீதிமன்றம் கேள்வி

”நாடாளுமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதே போல் தமிழக சட்டமன்ற நடவடிக்கையை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தயங்குவது ஏன்?” - சென்னை உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம் PT

"நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  தமிழக சட்டமன்ற  நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது" என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக்  கோரி தே.மு.தி.க. தலைவர் மறைந்த விஜயகாந்த் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, விஜயகாந்த் தரப்பில் வழக்கறிஞர் V.T.பாலாஜி ஆஜராகி, விஜயகாந்த் மரணமடைந்தது குறித்து தெரிவித்து, அவரது சட்டப்பூர்வமான பிரதிநிதி மூலம் வழக்கை தொடர்ந்து நடத்த இருப்பதாக தெரிவித்தார்.

தலைமைச்செயலகம்
தலைமைச்செயலகம்PT

அப்போது நீதிபதிகள், இதுபொது நல வழக்குதானே அவ்வாறு மனுதாரர் மாறுவதற்கு அவசியமில்லை என தெரிவித்த நிலையில், இதே கோரிக்கையுடந்தான் மற்ற இரண்டு வழக்குகளும் இருப்பதால், அவற்றில் தீர்வு கண்டாலே இந்த வழக்கிலும் பொருந்தும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அரசு தலைமை வழக்கறிஞர் P.S.ராமன் ஆஜராகி, கடந்த 2022ஆம் ஆண்டு முதல் பேரவையின் ஒவ்வொரு நிகழ்வாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருவதாகவும், படிப்படியாக இதை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது என்றும், நேரலையிலிருந்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவிடும் என்றும் தெரிவித்தார். மனுதாரர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, பேரவை நிகழ்வுகளை ஒளிபரப்பவில்லை என்றும், தற்போது ஆட்சிமாற்றத்திற்கு பிறகு நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமென வலியுறுத்துவதாக குற்றம்சாட்டினார்.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் போது, அவை நேரடியாக ஒளிபரப்பப்பட வாய்ப்புள்ளதால், சபை நடவடிக்கைகள் முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது எனவும் பி.எஸ்.ராமன் குறிப்பிட்டார்.

தமிழக சட்டமன்றம்
தமிழக சட்டமன்றம்PT

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நாடாளுமன்றத்தில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற நடவடிக்கைகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இதுசம்பந்தமாக விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com