”அந்நியர்களே பாரதத்தில் சாதி, மத பிரிவினையை உருவாக்கினார்கள்; சனாதனத்தை மீட்கணும்”-ஆளுநர் ரவி பேச்சு

"சாதி, மதம், ஆரியன், திராவிடன் என அந்நியர்கள் பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள். ரிஷிகளின் சனாதன கொள்கை துண்டிக்கப்பட்டுள்ளது அதை மீட்க வேண்டும்" என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆளுநர் ரவி
ஆளுநர் ரவிPT

கோவையில் நடைபெற்ற நொய்யல் பெருவிழாவின் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது, ’தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என தமிழில் உரையை துவங்கினார்.

மேலும் அவர் பேசுகையில், “சந்நியாசிகள் பங்கேற்றுள்ள நிகழ்வில் பங்கேற்பது ஆசிவதிக்கப்பட்டதாக உணர்கிறேன். நொய்யல் ஆறு மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு மிகவும் பாராட்டுக்குரியது.

RN Ravi
RN Ravipt web

பாரதம் என்றால் என்ன?

நம் நாட்டில் நீர்நிலைகள் உடனான தொடர்பு என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது. ஆனால், பல ஆண்டுகள் நம் கலாச்சாரம் உயிர்த் தன்மையை சிதைக்கும் எண்ணத்துடன் வந்த அந்நியர்களின் படையெடுப்பு, ஆக்கிரமிப்பால் அந்த உணர்வு துண்டிக்கப்பட்டது. பாரதம் என்றால் என்ன என்ற கேள்விக்கு ஆறு என்று முதலில் சொல்லப்படும். கலாச்சாரம் கொண்ட நாம் யார் என்பதை ஆறுகள் மூலமே சொல்லப்படும். படைக்கப்பட்ட குடும்பத்தில் நாம் (மனிதர்) ஒரு பொருள் என்பதை உணர வேண்டும். குருமார்கள், சந்நியாசிகள் ஆகியோர் தான் படையெடுப்பிலும் சனாதன கொள்கையின் தொடர்பை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள்.

பருவநிலை மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

தற்போது மேற்கத்திய பண்பாடு நம்மை அந்த தொடர்பிலிருந்து துண்டித்துள்ளது. அன்னை பூமியை பாழாக்கி வரும் இந்த காலத்தில் இதுபோன்று நிகழ்வு அவசியம். அன்னை இயற்கையை பாழாக்கி வருவதன் விளைவு தான், பருவநிலை மாற்றத்திற்கு காரணம் என்பதையும், தண்ணீர் இல்லையென்றால் ஒன்றும் இல்லை என்பதனால், நீரை அன்னையாக பார்த்து பிரார்த்திக்க வேண்டும். நாம் அனைவரும் குடும்பம் என்ற கருத்துருவை உலக நாடுகளுக்கு ஜி20 மாநாடு மூலம் பிரதமர் கூறி வருகிறார்.

corona injection
corona injection pt desk

ஒரே குடும்பமாக வாழ வேண்டும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல வகைகளில் பூமியில் வாழும் அனைத்து உயிர்களிடத்திலும் தொடர்பு வெளிப்படுவதை ரிஷிகள் சொன்னதுடன், அனைவரும் ஒரு குடும்பமாக வாழும் நிலையில், ஒருவருக்கு பிரச்னை என்றால் அது மற்றவற்றை பாதிக்கும் என சொன்ன ரிஷிகள் நம் பாரதத்தில் உள்ளதால் அந்த பொறுப்பு நமக்கு அதிகம்.

அந்நியர்கள் படையெடுப்புக்குப் பிறகும், நம்மை விட்டு சென்றவுடன், நாட்டில் தொழிற்சாலைகள், பொருளாதாரம் வளர்ந்தாலும், பாரதத்துடனான உயிர் தொடர்பு துண்டிக்கப்பட்டது. சாதி, மதம், ஆரியன், திராவிடன் என பிரிவினையை நம்மிடையே ஏற்படுத்தினார்கள். நம் நாட்டை வலுப்படுத்துவதே நம் ஒவ்வொருவரின் கடமை. ராஜா, ராணியாக செயல்படுவது நம் பாரதமில்லை. சமூகம் அடிப்படையில் ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் நாம் என்பதனால், அந்த சமூகத்தை மீட்க வேண்டிய நிலையில் உள்ளோம். நம் நாட்டை மக்கள் தான் உருவாக்கினார்கள் அரசு உருவாக்கவில்லை.

சில நாடுகள் நிலவை சொந்தம் கொண்டாட நினைக்கிறது

நிலவுக்கு போக வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், 100 ஆண்டுகளில் இராணுவ அதிகாரத்தால் ஆளப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு, அணு ஆயுதங்கள் செய்யக் கூடாது என்று சொன்ன நாடுகளின் மத்தியில், இந்தியா வளர்ந்து, நிலவு அவர்களுடைய சொந்தமில்லை என்பதை நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் சில நாடுகள் அதை சொந்தம் கொண்டாட நினைக்கிறது. ஆனால் தற்போது இந்தியாவால் அதை சாதிக்க முடிந்ததது. அனைவருக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் நாம் வெற்றி பெற்றுள்ளோம், நம் வலிமையை காண்பித்துள்ளோம்.

chandrayaan3
chandrayaan3pt desk

2047-ல் இந்தியா முழுமையான வளர்ந்த நாடாக இருக்கும்?

கொரோனா தடுப்பூசி மூலம் சம்பாதிக்க வேண்டும் என்று சில நாடுகள் எண்ணியது போல் நாம் எண்ணாமல் பகிர்ந்து கொண்டோம். உலகத்தின் நன்மைக்காக நாம் புது வலிமையுடன், உறுதியுடன், தெளிவுடனும் பயணிக்கிறோம். 2047-ல் இந்தியா முழுமையாக வலிமையான, வளர்ந்த நாடாக இருக்கும். இந்த பாரதம் ரிஷி, குருமார்களால் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், அதிகாரம் செய்யும் நோக்கம் இல்லாமல் அறிவை வழங்கும் என்பதால் ரிஷிகளின் வெளிச்சமே தற்போது உலகத்திற்கு தேவையானது.

அனைவரும் ஒரு குடும்பம் என இந்தியாவின் சமூகத்தை எழுப்புவதுடன், நாம் யார் என்பதை உணர வைக்க வேண்டும். அதற்கு நீர்நிலைகள் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்நிகழ்வு வெற்றியடைய வாழ்த்துகள். வளமாக மட்டுமின்றி அன்னையாக ஆறுகளை பார்க்கும் மன நிலையை உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com