கஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்
கஜா புயல் பாதிப்பிற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது நவம்பர் மாத சம்பளத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.
கடந்த 16-ஆம் தேதி ஏற்பட்ட கஜா புயல் காரணமாக யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு வரலாறு காணாத பேரழிவை டெல்டா மாவட்ட மக்கள் சந்தித்திருக்கிறார்கள். தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் ஊடுருவிய கஜா புயல், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் உயிர்ச்சேதங்களையும், பொருட்சேதங்களையும், உறவாக வளர்த்து வந்த ஆடு, மாடுகளையும் சூறையாடி சென்றுள்ளது.
ஆறா வடுவாக மாறிய கஜா புயலினால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் டெல்டா மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களும் நிதி அளித்துள்ளனர். சினிமா துறை, தொழில் துறை பிரபலங்கள் பலரும் முதலமைச்சரை சந்தித்து புயல் நிவாரண நிதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அளித்தார். நவம்பர் மாதத்திற்காக ஊதியம் ரூ3.5 லட்சத்தை அவர் நிதியாக வழங்கியுள்ளார். முன்னதாக, கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரில் ஆய்வு மேற்கொண்டிருந்தார். பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் அவர் கேட்டறிந்தார்.