பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 3 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பவானி ஆற்றின் நீராதாரத்தை நம்பியே இருக்கின்றன. பவானி ஆற்றின் குறுக்கே மஞ்சக்கண்டி, தேக்குவட்டை என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது. இதற்காக பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், கூடப்பட்டு என்ற ஆகிய இடங்களில் நில அளவை எடுக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. கேரள அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து, கேரளாவின் முயற்சியைத் தடுத்து நிறுத்த உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. அதன்படி, கேரள அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.