வணிகநோக்கில் ரிசார்ட்டுகள் செயற்கை நீர் வீழ்ச்சிகளை உருவாக்குவதா?-நீதிமன்றம் புதிய உத்தரவு

வணிகநோக்கில் ரிசார்ட்டுகள் செயற்கை நீர் வீழ்ச்சிகளை உருவாக்குவதா?-நீதிமன்றம் புதிய உத்தரவு
வணிகநோக்கில் ரிசார்ட்டுகள் செயற்கை நீர் வீழ்ச்சிகளை உருவாக்குவதா?-நீதிமன்றம் புதிய உத்தரவு

தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகள் குறித்து ஆய்வுசெய்ய சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையில், நில நிர்வாக ஆணையர், தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த வினோத் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம் அருவி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து உருவாகிறது. கடந்த 2019 தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான அருவிகள் இயற்கையாக உருவாகின்றன. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஐந்தருவி, குற்றாலம் அருவி உள்ளிட்ட இயற்கை அருவிகள் உள்ளன.

சீசன் காலங்களில் ஏராளமான கூட்டம் நிரம்பி வழியும் சூழலில், பொருளாதார ரீதியாக வசதிமிக்க சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், ஏராளமான தனியார் ரிசார்டுகள் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி, அவற்றை இணையதளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர். இதற்காக இயற்கையான அருவிகளின் நீர் வழிப்பாதையை மாற்றுகின்றனர். இதனால் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுபோல சட்ட விரோதமாக செயற்கை தனியார் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி தென்காசி மாவட்டத்தில் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், "நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சுற்றுலாத்துறை இயக்குனர் தலைமையில், நில நிர்வாக ஆணையர், தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், "5 நாட்களில் நீதிமன்ற உத்தரவை மதித்து குழு அமைத்த அரசை நீதிமன்றம் பாராட்டுகிறது. ஆனால் தனியார் ரிசார்டுகளில் வணிக நோக்கில் செயற்கை அருவிகள் உருவாக்கப்படவோ, செயல்படவோ கூடாது. அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என தெரிவித்தனர். அதற்கு அரசு தரப்பில், "99.9 சதவீதம் இயற்கை அருவிகளின் வழித்தடத்தை மாற்றி செயற்கை அருவிகள் உருவாக்கப்படவில்லை. அவ்வாறு சில தனியார் ரிசார்டுகள் செயல்பட்டாலும், இக்குழுவானது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்" என தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com