பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
Published on

பொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இதில் பல பெரும் புள்ளிகள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தொழிலதிபர்கள் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் இந்த வழக்கை திடீரென்று சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 

அதில், தமிழகத்தில் தொடரப்பட்டுள்ள சிலைக் கடத்தல் வழக்குகளில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் சிபிஐ விசாரிக்கும்படி தமிழக அரசு பரிந்துரை செய்திருந்தது. 

இந்நிலையில் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்திருந்தனர். இந்த வழக்கு மீண்டும் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு பிறிப்பித்த அரசாணையை, சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

அதோடு வழக்கு விசாரணைக்கு வந்த அன்றே ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐஜி, பொன் மாணிக்கவேலை சிலைக் கடத்தல் வழக்கில் ஒரு வருடத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்தும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர் சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். 

இந்நிலையில் சிலைக் கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை  எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com