காவலர் ஜெகதீசன் துரை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி
நெல்லையில் மணல் கடத்தல்காரர்கள் தாக்கியதில் உயிரிழந்த முதல்நிலை காவலர் ஜெகதீசன் துரை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் பகுதி தனிப்பிரிவு காவலர் ஜெகதீஷ் துரை. நம்பியாற்று பகுதியில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்கும் பணியில் தொடர்ச்சியாக இவர் கவனம் செலுத்தி வந்துள்ளார். நேற்றிரவு நம்பியாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்கும் பணியில் சக அதிகாரிகளுடன் காவலர் ஜெகதீஷ் ஈடுபட்டுள்ளார். ஆனால், இன்று காலையில் வெகுநேரமாகியும் ஜெகதீசன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, சக காவலர்கள் அவரை தேடியபோது பரப்பாடி பகுதியில் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
நம்பியாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடும் கும்பல் இரும்புக் கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காவலர் ஜெகதீஷை தாக்கிக் கொலை செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், காவலர் ஜெகதீசன் துரை குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியை முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், ஜெகதீசன் துரை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.