நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் - தமிழக அரசு
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
மாணவர் பருவம் முதலே அரசியல் களம் கண்டு வருபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்காக களத்திலும், நீதிமன்றத்திலும் போராடி வருகிறார். தமக்கென ஒரு சொந்த வீடு இல்லாத காரணத்தால், கடந்த 2006-ம் ஆண்டு முதல்,சென்னை தியாகராய நகரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தார்.
இதனிடையே அவர் வசித்து வந்த இடத்தில் புதிய திட்டம் வருவதாக கூறி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. குடியிருப்பு வாடகை வீடுகளை காலி செய்யுமாறு அரசு உத்தரவிட்டதை அடுத்து, மாற்று வீடு ஏதும் கேட்காமல் அங்கிருந்து காலி செய்துக்கொண்டு வெளியேறினார் நல்லகண்ணு. இதனையடுத்து அவருக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர்.
இதனையடுத்து வீடு விவகாரம் தொடர்பாக துணை முதலமைச்சர் ஓபிஎஸ், நல்லகண்ணுவிடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து பேசியுள்ள நல்லகண்ணு, வீடு ஒதுக்குவது தொடர்பாக அரசு கொள்கை முடிவு எடுத்து அறிவிக்கும் என ஓபிஎஸ் தெரிவித்ததாக கூறினார்.
இந்நிலையில் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு பொது ஒதுக்கீட்டில் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதுபோல கக்கன் குடும்பத்துக்கும் மாத வாடகைக்கு வீடு ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.