சுற்றி வளைத்த போலீஸ்.. சயனைடு தின்று தம்பதியினர் தற்கொலை

சுற்றி வளைத்த போலீஸ்.. சயனைடு தின்று தம்பதியினர் தற்கொலை

சுற்றி வளைத்த போலீஸ்.. சயனைடு தின்று தம்பதியினர் தற்கொலை
Published on

ரூபாய் 1.50 கோடி மோசடி தொடர்பாக தம்பதியினரை போலீசார் சுற்றி வளைத்த நிலையில் பதறிப்போன அவர்கள் செய்வதறியாது சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் ராஜ்குமார்- சிவசெல்வி. இவர்கள் கடந்த 6 மாதத்திற்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் வாடகை வீடு ஒன்றில் குடிபெயர்ந்துள்ளனர். பின்னர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பாதி விலைக்கு பழைய நகைகளை வாங்கி தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறியிருக்கின்றனர். அதன்படி ஒருசிலருக்கு பழைய நகைகளையும் குறைந்த விலையில் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதை நம்பி பலரும் லட்சக் கணக்கில் தங்களது பணத்தை ராஜ்குமார் தம்பதியினரிடம் வழங்கியுள்ளனர். இதனிடையே பணத்தை பெற்றுக் கொண்ட அவர்கள் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து தப்பித்துவிட்டனர்.

இதனையடுத்து பணம் கொடுத்து ஏமாந்த மருங்கூரை சேர்ந்த வாசன் என்பவர் குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்திடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வாசனை போல பலரிடம் ராஜ்குமார் தம்பதியினர் ஏமாற்றியது தெரியவந்தது. கிட்டத்தட்ட 1 கோடியே 62 லட்சம் ரூபாயை அவர்கள் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார் மற்றும் சிவசங்கரியை தேடிவந்தனர். அவர்களின் செல்போன் எண்ணை வைத்து தேடியபோது அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருப்பது தெரியவர தம்பதியினரின் புகைப்படத்தை நாக்பூர் போலீசாருக்கு அனுப்பிய தமிழக போலீசார் அவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். 

இந்நிலையில் நாக்பூரில் பயணிகள் ரயில் ஒன்றில் இருந்து ராஜ்குமாரும் சிவசெல்வியும் இறங்க முயன்றபோது போலீசார் அவர்களை பிடித்தனர். அவர்களின் பைகளை சோதனை செய்தபோது மோசடி செய்த பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இருவரையும் விசாரணைக்காக அங்குள்ள காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் செல்ல முயன்றனர். அந்த நேரத்தில் தம்பதியினர் தங்கள் கையில் மறைத்து வைத்திருந்த ஒரு பொருளை வாயில் போட்டனர். போலீசார் தடுப்பதற்குள் அவர்கள் நொடிப்பொழுதில் விழுங்கியும் விட்டனர். பின்னர் இருவரையும் போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் சயனைடு தின்றதால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுநீத்திரம் போலீசார் அவர்களின் உடல்களை நாக்பூரில் இருந்து நாகர்கோவில் கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com