தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை அதிகாலை சென்னை திரும்புகிறார்.
அரசுமுறை பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். கடந்த மாதம் 28 ஆம் தேதி தனது பயணத்தை தொடங்கிய முதல்வர் முதலில் இங்கிலாந்துக்கும், தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சென்றார். அங்கு, தொழில் முதலீட்டாளர்களையும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமாக உள்ள சூழலை எடுத்துரைத்த முதலமைச்சர், அதிக அளவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டு, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடிய சாத்தியகூறுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு துபாய் சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அந்நாட்டு தொழில் அதிபர்களை சந்தித்து தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் தனது 13 நாள் பயணத்தை நிறைவுசெய்துவிட்டு நாளை அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்ப இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.