“தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டும்” - முதலமைச்சர் வேண்டுகோள்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடி மக்கள் அமைதி காக்க வேண்டுமென்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்யநாதன், தமிழக காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அரசு தொடர்ச்சியான சட்டபூர்வமான மேல் நடவடிக்கையை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதிக் காக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், “2013ம் ஆண்டு ஜெயலலிதா ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டதை போல் தற்போதும் அதே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். அப்போது பேரணியில் சென்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மீது கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதோடு, அவர்களது வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதனால், அங்கு வன்முறை சூழல் உருவானது. அதனையடுத்து, சூழ்நிலையை கட்டுக் கொண்டுவரவே துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியது அவசியமானது” என்று முதலமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.