காவிரி விவகாரம்: கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

காவிரியில் இருந்து உரிய நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி டெல்டாவில் தற்போது உள்ள குறுவை நெற்பயிரை காப்பாற்றிடவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் வழியாக வலியுறுத்தியுள்ளார்.

 முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தன் கடிதத்தில் “மாதாந்திர அட்டவணைப்படி, பிலிகுண்டுலுவில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரின் பங்கை, உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக மதிக்கவில்லை.

மேலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ள படி, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக திறந்து விடவும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் ஏற்பட்ட பற்றாக்குறையை தீர்க்க கர்நாடக அரசுக்கு பிரதமர் உரிய அறிவுரைகளை வழங்கவும். மேலும் இதனை உறுதி செய்வதற்கு தேவையான அறிவுரைகளை மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com