2017-18-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அரசு தாக்கல் செய்யப் போகும் முதலாவது பட்ஜெட் இது. காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார். முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கலாகவுள்ளது.
கடந்த ஆண்டு பட்ஜெட்டை அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்தார். ஜெயலலிதா மரணமடைந்த பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்வது தாமதமானது. இந்த நிலையில், முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலைத் துறையுடன் நிதி அமைச்சக பொறுப்பையும் ஏற்றிருந்தார். பிறகு மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிதித் துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டது.
இலவச திட்டங்கள் மற்றும் மானியச் சுமை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை உயர்ந்து வருகிறது. கடன் சுமையும் அதிகரித்து வரும் சூழலில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. வருவாயை அதிகரிக்க, புதிய வரி விதிப்பு இருக்குமா, பொருட்கள் மீதான வரி உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்ட சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடும் நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்போவதாக திமுக அறிவித்துள்ளது. இதையடுத்து, பட்ஜெட் தாக்கல் சுமூகமாக நடைபெறுமா, அமளி நிலவுமா என்ற பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.