7 திமுக எம்.எல்.ஏக்கள் மீதான உரிமை மீறல் விவகாரத்தில் சட்டப்பேரவையில் இன்று அவை உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை பரிசீலித்த சபாநாயகர் தனபால், திமுக எம்.எல்.ஏ.க்களை மன்னிப்பதாகக் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவைக்கு குந்தகம் விளைவித்ததாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் திமுகவினர் மீது சபாநாயகரிடம் புகார் அளித்திருந்தார். அதற்கு விளக்கம் அளிக்குமாறு திமுக எம்.எல்.ஏ.க்கள் செல்வம், மஸ்தான், சுரேஷ் ராஜன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், முருகன் மற்றும் அம்பேத்குமார் ஆகிய 7 உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அவர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில், திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து நேற்று நடைபெற்ற அவை உரிமைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற திமுக உறுப்பினர்கள் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவித்த நிலையில், கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இதுதொடர்பாக, அவை உரிமைக்குழு இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அறிக்கையை பரிசீலித்த சபாநாயகர் தனபால், திமுக எம்.எல்.ஏ.க்களை மன்னிப்பதாகக் கூறினார்.