திருவள்ளூர் | கட்டுமான பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி 9வது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்
திருவள்ளூர் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் அடுத்த மப்பேடு சமத்துவபுரத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 1800 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமான பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கி 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானத்தில்,மேற்கு வங்கத்தை சேர்ந்த தொழிலாளி ராஜேஸ்வர் (54) என்பவர் கட்டுமான தொழிலாளர்கள் பிரிவுக்காக கட்டப்பட்டு வரும், அடுக்குமாடி குடியிருப்பின் 9 வது தளத்தில், வெளிப்புறமாக சிமெண்ட் கலவை பூசு வேலை பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த அவர் தடுமாறி ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சக தொழிலாளர்கள் உதவியுடன் மப்பேடு காவல் நிலையத்தில் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் உடலை போலீசார் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சக தொழிலாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.