திருவள்ளூர்: மருமகள் தற்கொலை வழக்கில் சிறையில் இருந்த மாமனார் உயிரிழப்பு
மருமகள் தற்கொலை வழக்கில் திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கரலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (64). இவரது மகன் சந்திரபோஸ் என்பவருக்கும் திவ்யா என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 14-ஆம் தேதி திவ்யா தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்றது. அதனடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக திவ்யாவின் கணவர் சந்திரபோஸ் அவரது மைத்துனர் மற்றும் அவரது மாமனார் பெருமாள் ஆகியோர் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டு திருவள்ளூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று, சிறையில் இருந்த பெருமாள் மயக்கம் அடைந்ததாகவும், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.