திருத்தணி முருகன் கோயில் பிரம்மோற்சவ விழா – விமர்சையாக நடைபெற்ற வள்ளியம்மை திருக்கல்யாணம்
செய்தியாளர்: B.R.நரேஷ்
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா கடந்த 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, இரவு நேரங்களில் உற்சவர் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று ஆறுமுக சுவாமி கோயிலுக்கு உற்சவர் சென்றடைந்தார். அங்கு ஊஞ்சல் சேவை நடைபெற்றது.
நள்ளிரவு 1 மணி அளவில் பார்வேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது இதில், முருகப்பெருமான் வள்ளியம்மையை கவர்ந்து வரும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9வது நாளான இன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மலைக்கோயிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், உற்சவர் முருகப்பெருமானுக்கும், வள்ளியம்மைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு சீர்வரிசை கொண்டு வந்தனர்.
முருகப்பெருமான் இரண்டாவதாக வள்ளியம்மையை திருமணம் செய்து கொண்டு கோயிலுக்குள் செல்லும் போது தெய்வயானை அம்மையார் கோயிலின் பிரதான வாயிலை முடி உள்ளே அனுமதிக்காமல் மறுப்பது பின்னர் முருகப்பெருமான் தெய்வானை அம்மையாரை சமாதானம் செய்து கோயிலுக்குள் அழைத்துச் செல்லும் வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.