திருப்பூர்: தண்ணீர் என நினைத்து கெமிக்கலை மதுவுடன் கலந்து குடித்த இருவர் பலி!
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே தண்ணீர் என நினைத்து மதுவுடன் கெமிக்கலை கலந்து குடித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வீரசோழபுரத்தில் கடல் பாசியில் இருந்து மருந்துகள் தயாரிக்கும் யுனிக் மரைன் அக்ரோ புராடக்ட் எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ரவி (57), சிவமுருகன் (49) ஆகியோர் இந்த் நிறுவன வளாகத்தில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு ரவி மற்றும் சிவமுருகன் ஆகிய இருவரும் மது அருந்த முயன்றுள்ளனர். அப்போது நிறுவனத்தில் இருந்த தண்ணீர் போன்ற கெமிக்கலை எடுத்து வந்து மதுவுடன் கலந்து அருந்தியுள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் இருவருக்கும் கடுமையான வயிற்று வலி ஏற்ப்பட்டுள்ளது. இது குறித்து அருகில் இருந்த மற்ற தொழிலாளர்களிடம் கூறியதும் அவர்கள் இருவரையும் வெள்ளகோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இருவரது உடல்களும் மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.