திருப்பத்தூர்: ரயில் படியில் அமர்ந்து பயணம் செய்த வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த பரிதாபம்!
திருப்பத்தூர் அடுத்த வேலன் நகர் ரயில்வே மேம்பாலம் அருகே அடையாளம் தெரியாத நபர் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லெபன் மாஜி என்பவரின் மகன் பீசே மாஜி (50), கடந்த 10 தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலத்தில் உள்ள கிரஷர் கம்பெனியில் வேலை செய்வதற்காக வந்துள்ளார். அங்கே ஊதியம் சரிவர கிடைப்பதில்லை என்பதால் மீண்டும் நாகர்கோவிலில் இருந்து சாலிமர் வரை செல்லும் குருதேவ் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊரான ஒடிசாவிற்கு ரயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
அப்போது திருப்பத்தூர் அருகே வேலன் நகர் ரயில்வே மேம்பாலம் அருகே அதிகாலை சுமார் 6.30 மணியளவில் ரயில்வே இருப்பு பாதைகளின் நடுவில் விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.