நெல்லை: அரசு பேருந்தில் ஏற முயன்ற பயணியின் கன்னத்தில் அறைந்த நடத்துனர், சஸ்பெண்ட்!
செய்தியாளர்: மருதுபாண்டி
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப் பட்டியலில் இருந்து திருநெல்வேலி டவுன் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று கிளம்பியுள்ளது. அந்த பேருந்தில் மூட்டை முடிச்சுகளுடன் (அதிகளவு லக்கேஜ்களுடன்) ஒரு பயணி ஏற முயன்றுள்ளார். அப்போது அந்த பயணியை, நடத்துனர் தகாத வார்த்தைகளால் பேசி பேருந்தில் ஏற விடாமல் தடுத்ததோடு கன்னத்தில் அறைந்துள்ளார்.
இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதைத் தொடர்ந்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பந்தப்பட்ட பயணியை தாக்கியது நெல்லை கட்டப்பொம்மன் நகர் பணிமனையைச் சேர்ந்த நடத்துனர் சேதுராமலிங்கம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து பணி நேரத்தில் பயணியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட புகாரில் சேதுராமலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து நெல்லை மண்டல போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.