இன்று மதுரை சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாண நிகழ்ச்சி : இணையத்தில் காண ஏற்பாடு!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று காலை நடைபெறுகிறது. கொரோனா அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், இணையதளத்தில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில் நடத்தப்படும் சித்திரைத் திருவிழா மிகவும் பழமையானதாகும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் இன்றி கோயிலின் உள் பிரகாரத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று திக் விஜயம் நிகழ்ச்சி நடைபெற்றது.
64 திருவிளையாடல்களில் ஒன்றான திக் விஜய நிகழ்வை எடுத்துக்காட்டும் வகையில், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வில் அம்புகளுடன் போரிடுவது போன்ற புராணக்கதை நிகழ்த்தப்பட்டது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் இன்று காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. பழைய திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை. எனவே திருக்கல்யாணத்தை பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே காண வசதியாக Madurai meenakshi என்ற யூடியூப் சேனலிலும், இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்ப கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. காலை 9.30 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணி வரை வழக்கமான தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் கோயிலில் அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாணக் கோலத்தில் அம்மனை நேரில் வழிபட அனுமதி இல்லை.