நாமக்கல் அருகே விவசாய நிலத்தில் இடி விழுந்த இடத்தில் நீர் ஊற்று பெருக்கெடுத்து வயலில் நிரம்பியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று நள்ளிரவு பரவலாக மழை பெய்தது. அதையொட்டி சேந்தமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகளவாக சேந்தமங்கலத்தில் 137 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில் சேந்தமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஜங்களாபுரத்தில் நேற்று நள்ளிரவில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் சரவணன் என்பவரது விவசாய நிலத்தில் இடி விழுந்ததாக தெரிகிறது. இதனிடையே நிலத்தில் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் நீருற்று பெருக்கெடுத்த வண்ணம் உள்ளது.
இதனால் அவ்வயல் முழுவதும் தண்ணீர் நிரம்பி அருகில் உள்ள வீதிகள் மற்றும் சாலையில் பாய்ந்தோடுகிறது. மேலும் அருகிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியிலும் நீர் புகுந்ததால் அப்பள்ளிக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து வட்டார கல்வி அலுவலர் செல்வி உத்தரவிட்டுள்ளார். விவசாய நிலத்தில் இடி விழுந்த இடத்தில் நீர் பெருக்கெடுத்து வருவதை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர். இதேபோல் நேற்று நாமக்கல் அன்பு நகர் பகுதியிலும் விழுந்த இடியால், தொடர்ந்து 2-வது நாளாக தண்ணீர் நிலத்திலிருந்து தானாக வெளியேறி அப்பகுதியில் பாய்தோடுகிறது.