மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தில் 3 முதலைகள் பழவாற்றில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தின் வழியே பழவாறு செல்கிறது. கடந்த சிலவாரங்களாக பெய்த மழையின் காரணமாக ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது மழை குறைந்ததை தொடர்ந்து, ஆற்றில் நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருக்குரக்காவல் பிரிதிபெற்ற ஆஞ்சநேயர்கோயிலுக்கு அருகே உள்ள பழவாற்று கரையோரம் உள்ள பகுதியில் மூன்று முதலையில் அடிக்கடி சுற்றி வருகின்றன.
இதனால் அப்பகுதியில் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஆஞ்சநேயர்கோயிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர். அப்பகுதியில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் ஆற்றில் கால்நடைகளை குளிப்பாட்டவோ, தண்ணீர் குடிக்கவிடவோ விட முடியாமல் தவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரண்டு முதலைகள் இருந்ததாகவும், தற்போது இனப்பெருக்கம் மூலம் மூன்று முதலைகளாக அதிகரித்து உள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர். எனவே, முதலைகளால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு அவற்றை பிடித்து பாதுகாப்பான இடத்தில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.