தூத்துக்குடி to சென்னைக்கு இனி இரவிலும் ஃபிளைட்.. எம்பி கனிமொழி கொடுத்த செம அப்டேட்!
தூத்துக்குடி விமான நிலைய வரலாற்றில் முதல் முறையாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடங்கியுள்ளது. மார்ச் 29 முதல் அமலுக்கு வந்த இந்த சேவையின் படி, சென்னை-தூத்துக்குடி இடையே மாலை 6.15 முதல் இரவு 9.45 வரை பறக்கும் நைட் பிளைட் இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலைய வரலாற்றில் முதன்முறையாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த இந்தச் சேவையானது, மார்ச் 29-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய கால அட்டவணையின்படி, சென்னையிலிருந்து மாலை 6:15 மணிக்குப் புறப்படும் விமானமானது, இரவு 7:55 மணிக்குத் தூத்துக்குடி விமான நிலையத்தைச் சென்றடைகிறது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் இரவு 8:15 மணிக்குத் தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, இரவு 9:45 மணிக்குச் சென்னை விமான நிலையத்தைச் சென்றடையும் வகையில் இந்தச் சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நீண்ட நாள் முயற்சியின் பலனாக இந்த இரவு நேர விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களைத் தலைநகர் சென்னையுடன் இணைக்கும் இந்த வசதி, தென்தமிழநாட்டின் வளர்ச்சிக்கு பெரும் வலுசேர்க்கும் எனத் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

