தூத்துக்குடியில் 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் இணைய சேவை தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி முதல் தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க 144 தடை உத்தரவும் தூத்துக்குடியில் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து நேற்று காலை 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் இணைய சேவையும் வழங்கப்பட்டது.