\
”வரலாற்றில் இது ஓர் மைல்கல்”- முதலமைச்சரின் அறிவிப்புக்கு அற்புதம்மாள் வரவேற்பு

”வரலாற்றில் இது ஓர் மைல்கல்”- முதலமைச்சரின் அறிவிப்புக்கு அற்புதம்மாள் வரவேற்பு

”வரலாற்றில் இது ஓர் மைல்கல்”- முதலமைச்சரின் அறிவிப்புக்கு அற்புதம்மாள் வரவேற்பு
Published on

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்காக பரிந்துரை குழு அமைத்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வருக்கு அவர் எழுதியுள்ள  கடிதத்தில், “ஒரு மனிதனை 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்பதே அதிகப்படியானது என்றார் மறைந்த நீதியரசர் வி.ஆர். கிருட்டிணய்யார். ஒரு நாடு நாகரீகமடைந்துவிட்டது என்பதை, ‘சிறைவாசிகளை அவ்வரசு எவ்வாறு கையாள்கிறது’ என்பதில் தான் அடங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரித்திற்கு உட்பட்டதே என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்திவிட்டது.

சிறை விதிகளின்படி இவ்வதிகாரத்தை பயன்படுத்தி, முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை சீர்த்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர். இதனையெல்லாம் உணர்ந்தவராக ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பில் முதலமைச்சரின் அறிவிப்பு, தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.

முதல்வரின் ஆணைப்படி ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் உளவியலாளர், மனநல மருத்துவ இயக்குநர், மருத்துவ கல்வி இயக்குநர், மூத்த வழக்கறிஞர், தலைமை நன்னடத்தை அலுவலர் மற்றும் சிறைத்துறை துணைத்தலைவர் என அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையே முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

முதல்வரின் கனிவுமிக்க இந்த மனிதநேய அறிவிப்பிற்கு, 31 ஆண்டுகளாக சிறைவாசிகள் துன்பங்கள் குறித்து நன்கு அறிந்தவள், நேரடி சாட்சி என்ற முறையில் என் அன்பு கலந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக்கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளின் தாய் அற்புதம்மாள், மகனை விடுவிக்க பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com