திருவேற்காடு: திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திருவேற்காட்டில் திருமணமான 1 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு காவல்துறை பரிந்துரைத்துள்ளனர்.
சென்னை திருவேற்காடு அடுத்த பெருமாளகரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(23), ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வினிஷால்(19), என்ற பெண்ணோடு கடந்த அக்டோபர் மாதம் 29 ம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் தினேஷ் வேலைக்கு சென்று விட்டார். வினிஷாலுக்கு அவரது தந்தை செல்போனில் தொடர்பு கொண்ட போது நீண்ட நேரமாக செல்போனை எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்று கதவை தட்டி உள்ளார். கதவை திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வினிஷால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன வினிஷால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வினிஷால் தனியார் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வந்தார். படித்து கொண்டிருக்கும்போது திருமணம் செய்து விட்டதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருமணமாகி 1 மாதம் ஆவதால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.