திருவாரூர்: இளம்பெண் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் புகார்
திருவாரூர் அருகே இளம்பெண் மரண விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறிய புகாரையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அதம்பார் ஒத்தவீடு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மீரா என்கிற ரஞ்சிதா (24). இருவரும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 4வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இதனிடையே மாமியார் மற்றும் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரஞ்சிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து இவரது உடலை நன்னிலம் காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேசமயம் ரஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் கூறிய நிலையில் நன்னிலம் காவல் துறையினர் அதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

