திருவண்ணாமலை: சுடுகாடு பாதையின்றி சடலத்தை வயல் வெளியில் தூக்கிச் செல்லும் அவலம்
ஆரணி அருகே சுடுகாடு பாதையின்றி சடலத்தை வயல் மற்றும் விளை நிலங்களில் கொண்டு செல்லும் அவலம், சுடுகாட்டுக்கு பாதை கேட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணியை அடுத்துள்ள 5 புத்தூர் ஊராட்சியில் சோமந்தாங்கல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நீண்ட காலமாக சுடுகாடு செல்ல உரிய பாதை இன்றி பொதுமக்கள் 1,1/2, கிலோ மீட்டர் தூரம் சுற்றி வந்தனர்.
இந்நிலையில், லட்சுமி (97) என்ற மூதாட்டி நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
அவ்வாறு சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல இதுவரையில் பாதை இல்லாததால், காலங்காலமாக விளை நிலங்களில் இறங்கி சடலத்தை கொண்டு செல்லும் அவலம் உள்ளது. இது குறித்து கிராம மக்கள் சம்மந்தப்பட்ட வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரையில் யாரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுடுகாடு பாதையின்றி 1,1/2. கிலோ மீட்டர் தூரம் விளை நிலங்களில் சடலத்தை கொண்டு செல்லும் அவலத்தை தவிர்க்க தனியாக சுடுகாடு பாதை அமைத்து தருமாறு கிராம மக்கள் அரசிடம் மன வேதனையோடு கோரிக்கை வைத்தனர்.

