போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் மீது காவல் துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாக சமூக வலைத்தளங்களில் பல வீடியோக்களை வெளியிட்டார் திருத்தணிகாசலம். இதனை அடுத்து அவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை இயக்குநர் புகார் அளித்தார். புகாரை அடுத்து திருத்தணிகாசலம் மே 6ம் தேதி கைது செய்யப்பட்டார். இதனிடையே ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மனு தொடர்ந்தார்.
அதனையடுத்து அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட காவல்துறை தரப்பு, “கொரோனா பதற்ற நிலையை லாபம் ஈட்டும் நோக்குடன் பயன்படுத்தி உள்ளார். ஆகவே ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும். தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சிலில் பெற்றதாகக் கூறும் சான்றிதழ் போலியானது” எனத் தெரிவித்தது.
இதனையடுத்து அவரது ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் திருத்தணிகாசலம் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால் காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.