திருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் கடந்த 8-ஆம் தேதி தாய் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர் வனபெருமாள். இவர் திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் கடந்த 20 வருடங்களாக செக்யூரிட்டி சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் திருத்தணி அருகே உள்ள பெருமாள் தாங்கள் புதூர் கிராமத்தில் தனது மனைவி விஜி (எ) வீரலட்சுமி, மகன் போத்திராஜ், மகள் பவித்ரா ஆகியோருடன் 25 ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஓராண்டுக்கு முன்பு அவரது மகளுக்கு திருமணம் நடைபெற்று தற்போது அவர் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி இரவு வனபெருமாள் பணிக்கு சென்றுவிட்டு 8-ஆம் தேதி காலை வீடு திரும்பினார். அப்போது மனைவி வீரலட்சுமி, மகன் போத்திராஜ் ஆகியோர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். வீட்டிலிருந்த 21 சவரன் தங்க நகை கொள்ளை போயிருந்தது. போலீசார் தீவிர விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சத்யராஜின் மகன் வெங்கடேசன் (எ) கண்ணதாசன் கடன் தொல்லை காரணமாக, வீரலட்சுமி, போத்திராஜ் இருவரையும் கொலை செய்துவிட்டு 21 தங்க நகையை கொள்ளையடித்து தெரியவந்தது.
கொலையாளி வெங்கடேசன் கொடுத்த தகவலின் பேரில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை விற்று தர உதவியதாக இருந்த திருத்தணி அடுத்த பொன்பாடி, மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உமாபதி, வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம் கீழாந்தூர் கிராமத்தை சேர்ந்த சண்முகம் மகன் சுரேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.