கடைகளில் கூட்டம் கூடாமல் இருக்க திருப்பூரில் புதிய ஏற்பாடு...!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடைகளில் கூட்டம் கூடாமல் சமூக விலகலை கடைபிடிக்க ஏதுவாக திருப்பூர் ஆட்சியர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸால் சுமார் 190 நாடுகளில் இயல்பு நிலைமை முடங்கியுள்ளது. இதுவரை சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளாலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவதால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்தியாவை பொருத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கூட்டம் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள வணிக வளாகங்கள், தியேட்டர்கள், கல்வி நிலையங்கள், பெரிய கடைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய சிறிய மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் சமூக விலகலை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சமூக விலகலை கடைபிடித்து மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகளில் கூட்டம் கூடாமல் சமூக விலகலை கடைபிடிக்க திருப்பூர் ஆட்சியர் புதிய ஏற்பாடு ஒன்றை செய்துள்ளார்.
அதாவது, திருப்பூர் மக்கள் அப்பகுதியில் இருக்கும் சில கடைகளுக்கு போன் செய்து ஆர்டர் கொடுத்துவிட்டு பின்னர் அவர்கள் சொல்லும்போது சென்று வாங்கிக் கொள்ளலாம் என அம்மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட கடைகளின் பெயர்களையும், அதன் தொலைபேசி எண்களையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.