தமிழக அரசியல் வாதிகளுக்கு ராஜபக்ச கட்சி அறிவுரை கூறவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்ச மகன் நமல் தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதாக இன்று அறிக்கை வெளியிட்டார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற களிப்பில் மகிந்தா ராஜபக்ச மகன் நமல் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். தொடர்ச்சியாக ராஜபக்சே கட்சி மற்றும் அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசியல் வாதிகளுக்கு அவர்கள் அறிவுரை கூற வேண்டாம். நான் ஏற்கனவே இலங்கை சென்றபோது மகிந்த ராஜபக்சவுடன் தமிழர்களின் உரிமைகளுக்காக பேசி உள்ளேன்.
அத்துடன் இன்று ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலைக்கு விவவாரம் சம்பந்தமாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து உயர்மட்ட விசாரணை குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இடம் வலியுறுத்தி உள்ளேன். தமிழக அமைச்சரவை மேயர் தேர்வு செய்வதில் பழைய முறையை கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இதன் மூலம் குதிரை பேரம் நடைபெற வாய்ப்புள்ளது” எனக் கூறினார்.