மறைமுக தேர்தலுக்கு தடைக்கோரி திருமாவளவன் வழக்கு
உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு மறைமுகத்தேர்தல் கொண்டு வந்துள்ள தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க கோரியுள்ளார்.
மேலும், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை எனவும் மறைமுகத் தேர்தல் குறித்த அவசர சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சிக்கு நேர்முகத்தேர்தல் தான் நடத்த வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.