'என்ன கடத்தி ரூ.1.50 கோடியை கொள்ளையடித்தனர்'-அதிமுக நிர்வாகி மீது முன்னாள் எம்எல்ஏ புகார்

'என்ன கடத்தி ரூ.1.50 கோடியை கொள்ளையடித்தனர்'-அதிமுக நிர்வாகி மீது முன்னாள் எம்எல்ஏ புகார்
'என்ன கடத்தி ரூ.1.50 கோடியை கொள்ளையடித்தனர்'-அதிமுக நிர்வாகி மீது முன்னாள் எம்எல்ஏ புகார்

பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து பணத்தைப் பறித்துச் சென்றதாக முன்னாள் அதிமுக நிர்வாகி மீது புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (45). அதிமுகவை சேர்ந்தவர். இவர் கடந்த 2016 முதல் 2021 வரை பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தார். இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் தன்னை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்து காயப்படுத்தியதாக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் கூறியதாவது... நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் புஜங்கனூரில் இருந்து தனது பைக்கில் பவானிசாகரில் உள்ள ஸ்டேட் பேங்க் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம் பட்டி பிரிவு அருகே சென்றபோது தன் பைக்கின் பின்னால் வந்த கார், திடீரென பைக்கை வழிமறித்து காரில் இருந்து இறங்கிய 6 நபர்கள் தனது கண்ணை கட்டி காரில் ஏற்றி கடத்திச் சென்றனர்.

இதையடுத்து அரைமணி நேர பயணத்திற்குப் பின்பு அடையாளம் தெரியாத ஒரு வீட்டில் வைத்து தன்னை அடித்து துன்புறுத்தினர். இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் நேருநகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக நிர்வாகி மிலிட்டரி சரவணன் என்பவர் 3 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் தன்னை விடுவிப்பதாக கூறி பேச்சுவார்த்தை நடத்தினார்.

பணம் தன்னுடைய வீட்டில் உள்ளதாக கூறியதை அடுத்து ஈஸ்வரனை, மிலிட்டரி சரவணன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர் வீட்டில் வைத்திருந்த பணம் ரூ.1.50 கோடியை கொடுத்தவுடன் தன்னை விட்டு விட்டுச் சென்றனர். கடத்திச் சென்ற நபர்கள் தாக்கியதில் கால் தொடை மற்றும் பின் முதுகில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதால் பணம் கேட்டு மிரட்டி கடத்திச் சென்று அடித்து உதைத்து பணத்தை பறித்துச் சென்ற கும்பல் மீது பவானிசாகர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற ஈஸ்வரன் பின்னர் கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com