
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திராவிட இயக்க எழுத்தாளர் திருநாவுக்கரசு மற்றும் தொ.மு.ச முன்னாள் துணைத் தலைவர் சபாபதியின் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். இதையடுத்து மணமக்கள் சிற்றரசு - எழிலரசி ஆகியோரின திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதைத் தொடர்ந்து மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது...
“திராவிட மாடல் ஆட்சியில் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம். மாணவர்களுக்கு காலை உணவு , பெண்கள் இலவச பேருந்து பயணம், கல்லூரி மாணவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ஆகிய திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
அதேபோல் அண்ணா பிறந்தநாள் முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமல்படுத்தப்படடு 1 கோடி பேருக்கு வழங்கப்பட உள்ளது. அதனால் ஆத்திரம் , எரிச்சல், பொறாமையில் இன்று சிலர் அந்த திட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவிற்கே இன்று பேராபத்து வந்துள்ளது, அதிலிருந்து இந்தியாவை காப்பாற்ற முயற்சித்து வருகிறோம்.
2014-ல் பாஜக அரசு பொறுப்பேற்கும் முன்பு கொடுத்த வாக்குறுதியை பாஜகவினர் நிறைவேற்றினார்களா?. தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தை விமர்சிப்போர் அது குறித்து ஏன் கேள்வி எழுப்பவில்லை?. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு தனி நபருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவேன் என்றாரே பிரதமர். 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரமாவது வழங்கினாரா? இல்லை 15 ரூபாயாவது; வழங்கினாரா. கிடையாது. அதுகுறித்து அவர்கள் சிந்திக்கவோ , பேசவோ இல்லை.
மாதம் 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை பாஜகவினர் காற்றில் பறக்கவிட்டு விட்டனர். சர்வாதிகார ஆட்சியை அகற்ற இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சியும் ஒன்றிணைத்துள்ளோம். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை காட்டிலும் யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் எதிர்க் கட்சிகள் கூட்டம் நடந்தது. வரும் 17, 18 ஆம் தேதிகளில் பெங்களூரில் எதிர்க்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளோம். எதிர்கட்சிகள் கூட்டத்தால் எரிச்சலடைந்துள்ள பிரதமர், தான் பிரதமர் என்பதையும் மறந்து ஏதேதோ பேசி , உளறி வருகிறார்.
இதன் காரணமாக எந்த சூழல் ஏற்பட்டாலும், ஏன்... ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், இம்மி அளவும் நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நமது ஒரே கொள்கை, ஒரே லட்சியம் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்றார்.