நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு முதல் முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது என பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அபிசேகப்பட்டியில் செயல்படுகிறது. இதில் முதுகலை தமிழ்த்துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது எனவும், அதனை மாற்றியமைக்கும் வகையில் இந்த ஆண்டிலிருந்து தமிழ்த்துறையில் முதுகலை சேரும் மாணவர்களுக்கு எந்தவொரு கட்டணமும் கிடையாது, இது தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய முயற்சியாக எடுத்துள்ளதாக பல்கலைகழக துணைவேந்தர் பாஸ்கர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
தமிழகஅரசு 41 உறுப்பு கல்லூரிகளை அரசே ஏற்று நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கடையநல்லூர், நாகலாபுரம், சாத்தான்குளம், கன்னியாகுமரி நான்கு கல்லூரிகளிலும் மாணவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். அட்மிஷன் பணம் கட்டிய மாணவர்களுக்கு அரசின் கட்டண தொகை போக மீதி பணம் திரும்பக் கொடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.